இரண்டாம் பராந்தக சோழனான சுந்தர சோழனுக்கும் அவன் பட்டத்தரசி வானவன் மாதேவிக்கும் ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரத்தில் பிறந்தான் அருண்மொழிவர்மன்.
இது "சதய நாள் விழா உதியர் மண்டலந் தன்னில் வைத்தவன்"
என்ற கலிங்கத்துபாரணி அடிகளால் பெறப்படுகிறது.
திருவாலங்காட்டு செப்பேடுகள் இவன் கைகளில் சங்கு,சக்கர ரேகைகள் இடம் பெற்று இருந்தன என்று குறிப்பிடுகின்றன.
சுந்தர சோழனுக்கு மூன்று பெரிய தந்தைகள் இருந்தனர்.ஆகையால் சுந்தர சோழன் ஆட்சி பீடம் ஏறமாட்டார் என்றே அனைவரும் நினைத்தனர்.ஆனால் முதலாம் பராந்தகனின் புதல்வன் உத்தமசீலி என்பான் பாண்டிய நாட்டு போரில் உயிர் துறந்தான்.அது போலவே முதல் பராந்தகனின் முதல் புதல்வனும் மிக பெரும் வீரனுமாகிய ராசாதித்தன் ராட்டிடகூட போரில் ஆனை மேலமர்ந்த படியே வீரசொர்க்கம் எய்தினான்.
முதலாம் பராந்தகனுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தார் அவரது இரண்டாம் புதல்வர் கண்டராதித்தர்.கண்டராதித்தனின் புதல்வன் சிறிய குழந்தை என்பதால் அவருக்கு பின்னர் அவனது இளவலும் சுந்தர சோழனின் தந்தையுமாகிய அரிஞ்சய சோழன் ஆட்சிக்கு வந்தான்.சில திங்களில் அவனும் காலமானதால் அவனது புதல்வனாகிய இரண்டாம் பராந்தக சோழனாகிய சுந்தர சோழன் ஆட்சிக்கு வந்தார்.
சுந்தர சோழருக்கு மூன்று குழந்தைகள்.முதலாமவன் பெரும் வீரனாகிய ஆதித்ய கரிகாலன்.அவனுக்கடுத்து குந்தவை என்னும் பெண் பிறந்தாள்.இவர்களுக்கு பின்னர் கடைக்குட்டியாக பிறந்தவன் தான் அருண்மொழிவர்மன்.
குந்தவி பிராட்டியார் வல்லவரையன் வந்தியத்தேவன் என்னும் கீழை சாளுக்கிய மன்னனை மணந்தார்.
அந்நாளில் பாண்டிய நாடு சோழரின் ஆதிக்கத்திற்கு உட்படாததால் பாண்டிய நாட்டின் மீது படையெடுப்பது இன்றியமையாததாகி விட்டது.கி.பி.966 இல் சுந்தர சோழனின் புதல்வன் ஆதித்ய கரிகாலன், கொடும்பாளூர் பூதி விக்கிரமகேசரி, தொண்டை நாட்டு சிற்றரசன் பார்த்திபேந்திரவர்மன் ஆகியோர் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்தனர். அப்போரில் வீரபாண்டியனை கொன்று ஆதித்ய கரிகாலன் அப்போரில் பெரும் வெற்றி பெற்றான்.
"வீரபாண்டியனை தலை கொண்ட கோப்பரகேசரிவர்மன்"
என்றே ஆதித்ய கரிகாலன் திருவாலங்காடு செப்பேடுகளில் குறிப்பிடப்படுகிறான்.இவனது பெரும் ஆற்றலை கண்ட சுந்தர சோழன் இவனுக்கு கி.பி.966இல் இளவரசு பட்டம் சூட்டினான்.இத்துணை பெரிய ஆற்றலை உடைய இவன் கி.பி-969இல் சோழ நாட்டிலேயே சில வஞ்சகர்களால் கொல்லப்பட்டான்.போர்க்களத்தில் எதிரிகளின் வாளுக்கு மடியாத கரிகாலன் சதிவலையில் வீழ்ந்து மடிந்தான்.
திருவாலங்காடு கல்வெட்டு,
"வானுலகை பார்க்கும் ஆசையினால் ஆதித்தன் அஸ்தமனத்தை அடைந்தான்.உலகில் கலி என்னும் இருள் சூழ்ந்தது."
என்கின்றது.
ஆதித்த கரிகாலன் போன்றதொரு வீரனை அது நாள் வரை கண்டிராத சோழ நாடு அவனது மறைவால் சோகத்தில் ஆழ்ந்தது.ஆதித்தனின் மறைவை தாங்க இயலாத சுந்தர சோழன் சில திங்களில் வானுலகம் எய்தினான்.சுந்தர சோழனின் மறைவுக்கு பின்னர் சோழ நாட்டில் பெரும் அரசியல் குழப்பம் நிகழ்ந்தது.சோழ நாட்டின் கீழ் இருந்த சிற்றரசர்களில் ஒரு சாரார் கண்டராதித்தரின் புதல்வரான உத்தம சோழர் ஆட்சி பீடத்தில் ஏற வேண்டும் என்றும் மற்றொரு சாரர் அருண்மொழி வர்மனே ஆட்சி பீடம் ஏறவேண்டும் என்றும் தங்களுக்குள் பிரிந்தனர்.
சங்கு சக்கர ரேகைகளை உடைய அருண்மொழிவர்மனுக்கு மக்களின் ஆதரவு பெரும் அளவில் இருந்தது.இந்த அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி எதிரிகள் மீண்டும் சோழ நாட்டின் மீது படைஎடுக்க கூடாது என்று நினைத்த அருண்மொழிவர்மன் இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக ஆட்சி பீடத்தின் மீதான தனது உரிமையை கண்டராதித்தரின் புதல்வனான உத்தம சோழனுக்கு விட்டுகொடுத்தார்.
மிக பெரும் தொன்மை வாய்ந்த சோழ நாட்டின் அரசுரிமையை தனது சிறியதந்தைகாக விட்டு கொடுத்தது அருன்மொழிவர்மனின் தயாள குணத்தை காட்டுகிறது.
உத்தம சோழனின் பதினைந்து ஆண்டுகால ஆட்சிக்கு பின்னர் கி.பி-985இல் அரசு கட்டில் ஏறினான் ராசகேசரி அருண்மொழிவர்மன்.தனது ஆட்சியின் மூன்றாம் ஆண்டில்(கி.பி-988) சேரனையும் பாண்டியனையும் கந்தாளூர் சாலை போரில் வென்றான்.இப்போருக்கு பிறகே அரசருக்கேலாம் அரசர் என்று பொருள் படும் "ராஜராஜன்" என்னும் அபிஷேக பெயரை சூடினான்.அதுவே அவனது பெயராக பின்னாளில் மாறி போனது.
No comments:
Post a Comment